11 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அளவில் முதலிடம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தஞ்சை சப் இன்ஸ்பெக்டர் அமலா.!



 தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு டெல்லியில் கடந்த 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தேசிய குற்ற ஆவண கூடத்தில் நடந்தது. இதில் தேசிய அளவில் 236 பேரும், தமிழ்நாட்டில் இருந்து 174 பேரும் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.இவர்களில் தஞ்சை மாவட்ட போலீசில் விரல் ரேகை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அமலா இந்த தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியானது. இதில் அமலா, அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார்.

இதையடுத்து நேற்று தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற அமலாவை நேரில் வரவழைத்து பாராட்டினார்.இதுகுறித்து அமலா கூறுகையில், எம்.எஸ்சி வேதியியல் பட்டம் பெற்ற நான், கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டராக விரல் ரேகை பிரிவில் பணியில் சேர்ந்தேன். குற்றப்பிரிவு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றால், விரல் ரேகை நிபுணர் என்ற சான்றிதழை பெற வேண்டும்.இந்த சான்றிதழை கடந்த 2011-ம் ஆண்டு தஞ்சையில் தற்போதைய குற்றப்பிரிவு(விரல் ரேகை) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹேமா சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது பெற்றார்.

அவரது வழிகாட்டுதலால் நான் இந்த தேர்வை எழுதினேன். இதன் முடிவுகள் வந்ததில் அகில இந்திய அளவில் நான் முதலிடம் பிடித்துள்ளேன். தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவது மட்டும் அல்லாமல் குற்றவாளிகள் செய்த குற்றங்களை நிருபிக்க கோர்ட்டில் சான்றிதழ் இவர்கள் மட்டுமே வழங்க முடியும்.கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு, இந்த தேர்வை தமிழகத்தில் உள்ள யாரும் எழுதவில்லை. 11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு சார்பில் பங்கேற்று எழுதி வெற்றி பெற்றுள்ளது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும். இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post