தஞ்சை கோவில் அறங்காவலராக இஸ்லாமியர் நியமனம்; பொய் தகவல் பரப்பியதாக வி.எச்.பி., நிர்வாகி கைது.!

 


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள பிரசன்ன ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அறங்காவலர்களாக நர்கீஸ்கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இஸ்லாமியர் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், 'என் அப்பா தங்கராஜ், அம்மா நீலாவதி இருவரும் ஹிந்துக்கள் தான். அம்மா நீலாவதிக்கு பிரசவத்தில் சிக்கல் இருந்தபோது, நர்கீஸ்கான் என்ற மருத்துவர் உதவியுள்ளார். அவருடைய நினைவாக, எனக்கு, மருத்துவர் நர்கீஸ்கான் பெயரை சூட்டியுள்ளனர்' என, நர்கீஸ்கான் விளக்க வீடியோ வெளியிட்டார்

மேலும், தவறான தகவல் பரப்பியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அய்யம்பேட்டை போலீசில் கடந்த மார்ச் 20ல் நர்கீஸ்கான் புகார் அளித்தார். புகாரின்படி, சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்ட நபர் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த சரவண கார்த்தி, 43, என்பவர் தான், சமூக வலைதளங்களில் தகவல் பதிவிட்டது என தெரிய வந்தது. சரவண கார்த்தி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில அமைப்பாளர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, கலவரத்தை துாண்டும் வகையில் தவறான செய்தியை பதிவிட்டு, பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாக, சரவண கார்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் இருந்த அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சரவண கார்த்திக்கு உடல்நிலை சரியில்லாததால், தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post