பாதுகாப்பான நாடு அமீரகம் என்பதற்கு மற்றொரு உதாரணம்..! 65% கீழ் குறைந்த குற்றவியல் வழக்குகள்..! துபாய் காவல்துறை தகவல்..!

 
 
உலகளவில் குறைவான குற்ற விகிதங்களை பதிவு செய்யும் முதன்மையாக நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமீரகத்தில், குற்றங்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மேலும் குறைந்திருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் அறிக்கைகளின் எண்ணிக்கை விகிதமானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக துபாய் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி தலைமையில் நடைபெற்ற பொது குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) காலாண்டு மதிப்பீட்டுக் கூட்டத்தின் போது இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லெப்டினன்ட் ஜெனரல் அல் மர்ரி, குற்றப் புலனாய்வுப் பொதுத் துறையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகவும் மற்றும் உயர் நிபுணத்துவத்துடன் கைதுசெய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் குற்றப் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவித் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி, பொது குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜமால் சலேம் அல் ஜல்லாஃப், மற்றும் பொது குற்றப் புலனாய்வுத் துறையின் துணைத் துறைகளின் இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.



 

Post a Comment

Previous Post Next Post