முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் இம்ரான்கான் என்பவரும், அவரது மகன் அப்துல் காதரும் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தில்லைவிளாகத்தைச் சேர்ந்த பாலசுந்தரி கடந்த 29 ம்தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில் அடுத்த நாளே மருத்துவமனைக்கு வந்த சித்தமல்லியை சேர்ந்த பாஜக ஒன்றிய செயலாளர் முகேஷ்குமார் மற்றும் வீரசேகரன், தவறான சிகிச்சையால் பாலசுந்தரி இறந்துவிட்டதாகவும், 5 லட்சம் ரூபாய் தராவிடில் பிரச்னை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
பயந்துபோன இம்ரான்கான் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க, அந்த பணத்தை வாங்கிக்கொண்ட இருவரும் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளனர். ஒன்றாம் தேதி மீண்டும் மிரட்டியதில், இம்ரான் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதனிடையே, தில்லைவிளாகத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தபோது, பாலசுந்தரி உயிருடன் இருப்பது தெரிந்துள்ளது.
அதனைதொடர்ந்து இம்ரான்கான், அப்துல் காதர் மற்றும் அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் காத்திருந்த நிலையில், முகேஷ்குமாரும், வீரசேகரனும் மீதி பணம் வாங்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது இருவரையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்த முத்துப்பேட்டை போலீசார், தலைமறைவான பாலசுந்தரியை தேடி வருகின்றனர்.

Post a Comment