எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
புனிதமிகு ரமழானில் இறையருளைப் பெற்று, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இஸ்ரேலின் மனிதநேயமுற்ற, பயங்கரமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக, குறிப்பாக காஸா மக்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.
காஸாவில் பாலஸ்தீன மக்கள் எதிர் கொள்ளும் துயரங்கள் சொல்லொணாதவை. இடைவிடாத குண்டு வீச்சுகள், வீடுகள் இடிந்து தரைமட்டமாவது, மருத்துவமனைகள் தகர்க்கப்படுவது, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழப்பது என அவர்களது வாழ்க்கை பெரும் சோதனையாக மாறி உள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவின் உட்கட்டமைப்பு சிதைந்து, மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். மருந்துகள் கிடைக்காமல் புண்களுடன் அவதிப்படுவோர், பசியால் வாடுவோர், தங்கள் குடும்பத்தினரை இழந்து தனித்து நிற்போர் என அவர்களது வலி அளவிட முடியாதது.
இத்தகைய கொடுமைகளுக்கு மத்தியில், புனித ரமழான் மாதத்தில் நாம் இறையருளை வேண்டி அவர்களுக்கு அமைதியும் நீதியும் கிடைக்கவும், அவர்களது துயரங்களை நினைவு கூர்ந்து, இந்த அநீதியான துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பிரார்த்திப்போம். இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிப்போம்.
ஒன்றிய அரசு, தனது சூழ்ச்சிகரமான கொள்கைகள், தோல்வியுற்ற ஆட்சி, கார்ப்பரேட் கூட்டு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள், பாகுபாடு நிறைந்த ஆட்சி மற்றும் சமூக அரசியலுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி குரல் எழுப்புவதை அடக்க முயல்கிறது. வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தியபோது, மக்கள் திரளைக் கண்டு அஞ்சிய அரசு, விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி கட்சியை இலக்காக்கியது. எஸ்டிபிஐ கட்சி தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸி அவர்களை பொய் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்து, கட்சியின் அலுவலகங்கள், தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் சோதனைகளை நடத்தியது.
அரசின் மக்கள் விரோத, முஸ்லிம் விரோத பாசிச நிகழ்ச்சி நிரலை தோற்கடிக்க, ஒவ்வொரு குடிமகனும் எழுந்து நிற்க வேண்டியது அவசியம். அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி, வக்ஃபு நில அபகரிப்பு மசோதா, விசாரணை அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் கொடுங்கோல் சட்டங்களை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.

Post a Comment