5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரும் முறை ... உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ... கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல் ...!!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வர இருப்பதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தேசிய மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. இதுகுறித்து அதன் மாநிலச் செயலாளர் k.அஷ்ரப் அவர்கள் வெளியிட்ட அறிக்கை .

#கேம்பஸ்_ஃப்ரண்ட்_வலியுறுத்தல்!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டுவர இருப்பதாக தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. இதனை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறும்போது இந்த ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும், இது குறித்து அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

பக்குவமற்ற வயதினருக்கு இத்தகைய நடைமுறையை அமல்படுத்துவது மாணவர்களுடைய தேர்ச்சி விகித்தை வெகுவாக குறைக்கும் என கேம்பஸ் ஃப்ரண்ட் கருதுகிறது.  ஏற்கனவே பொதுத்தேர்வு நடக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கும் நிலையில் தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பினருக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியடையும் பட்சத்தில் மனஅழுத்தம் ஏற்பட்டு  மாணவர்கள் விபரீத முடிவுகளில் இறங்குகின்றனர்.  பக்குவமுள்ள மாணவர்களே இத்தகைய விபரீத முடிவுகளை எடுக்கின்ற நிலையில் பக்குவமற்ற சிறு வயதினரான 5 மற்றும் 8 ஆம் வகுப்பினருக்கு பொதுத்தேர்வை அவசர கதியில்கொண்டு வருவது  மத்திய அரசின் அழுத்தங்களினாலோ என்ற சந்தேகம் எழுகிறது. சரியான முன்னறிவிப்புகள் இல்லாமல் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக இந்த பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தினால் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்கள் தேர்ச்சி முறை ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. இது ஏழை நடுத்தர மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்கு   ஆபத்தாக அமைவதோடு, குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் நிலையை உருவாக்கும்.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களுடைய மனநிலையையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற முறையை திரும்பப் பெற வேண்டுமெனவும், புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க நினைக்கும் குலக்கல்வி முறையை தமிழகத்தில் வேறு வடிவில் முயற்சிப்பதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும்,

 மாணவர்களை பாதிக்காத வகையில் அவர்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு அரசு கல்விமுறையில் அனைத்து மாணவர்களின் படிப்பும் வீணாகாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

K. அஷ்ரப்
மாநில பொதுச்செயலாளர்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Post a Comment

Previous Post Next Post