மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் இந்திய நிறுவனம் தனது விமானம் ஒன்றில் காந்தியின் உருவப்படத்தை வரைந்துள்ளது. தேச தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்.
”சத்தியாகிரகம்” என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்பட்டார்.
“அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்
அகிம்சை வழியாக நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய காந்தியின் பெருமையை உலக தலைவர்கள் போற்றியிருந்த நிலையில், இன்று பிறந்தநாள் காணும் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் இந்திய விமான நிறுவனம் ஏ320 என்ற விமானத்தின் பின் பகுதியில் காந்தியின் உருவப்படத்தை வரைந்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானம் உலக நாட்டு பயணிகளின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அகிம்சை என்றொரு !
ஆயுதம் ஏந்தி!
இனிய சுதந்திரம்
ஈட்டித் தந்தார்!
உண்மையை உலகத்திற்கு உரைத்தவர்!
ஊனை மறுத்தார்!
எளியோர் வாழ்கையினை
ஏங்கிய வாழ்ந்து காட்டினார்!!
ஐயத்தை அகற்றி அறிவை வளர்த்தார்!
ஒற்றுமை உணர்வை ஓங்கிடச் செய்தார்!
ஒளவை சொன்ன அறத்தின் வழியில் வாழ்ந்தார்!
அஃது உலகம் போற்றியது தேசத்தின் தந்தையை!
அன்னல் உரைத்த அறிவுரை ஏற்போம்.!
அன்பின் வழியில் அனைவரும் செல்வோம்.!”
Post a Comment