சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை - மகன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் எற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.
காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் நிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும், அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் பென்னிக் ஸை சந்தித்த அவரது நண்பர்களிடம் போலீசார் தாக்கியதில் தனது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்து கொண்டே உள்ளது என பென்னிக்ஸ் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சிறையில் அவருக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, சிறைக் காவலர்கள் அவரை பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி
அங்கு அவர் உயிரிழந்தார்
கடையடைப்பு தொடர்பாக முதலில் பென்னிக்சின் தந்தையை போலீசார் அழைத்துச் சென்று அடித்ததாகவும், காவல் நிலையம் சென்று அதுகுறித்து வாக்குவாதம் செய்ததால் பென்னிக்சை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், அதன் பின்பே கோவில்பட்டி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும், பென்னிக்ஸ் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு இன்று சாத்தான்குளத்தில் வியாபாரிகள் கடையடைப்பு அறிவித்துள்ளனர். இதனியே பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் இன்று காலை மரணம் அடைந்தார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவி வருகிறது.
இருவரது உடல் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment