தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தப்பிச் சென்ற ரவுடியின் கை, கால்கள் உடைய ஆரம்பித்திருக்கிறது.


புதுச்சேரியில் ரவுடிகள் குறித்து விசாரிக்கச் சென்ற 2 காவலர்களை நடுரோட்டில் வைத்து அந்த ரவுடிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரிக்கு டி.ஜி.பியாக வந்திருக்கும் பாலாஜி ஸ்ரீவத்சவா மாநிலம் முழுவதிலும் ரவுடிப் பட்டியலில் இருப்பவர்களின் விபரங்கள், அவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் பகுதிகளில் இருக்கும் ரவுடிகள் குறித்த விபரங்களையும், அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படிகரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் மக்கள் கூடும் பிரதான சந்திப்பில் கையில் கைத்தியுடன் சிலர் நின்றுகொண்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்று வந்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்றனர்





அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த 3 பேரும் இரண்டு காவலர்களையும் நடு ரோட்டில் வைத்து தாக்கி தப்பிச் சென்றனர். சமூக வலைதளங்களில் வெளியான இந்தக் காட்சி பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. தப்பிச் சென்ற அவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல் (307), காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் (353) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், சிறப்பு அதிரடிப்படை மற்றும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வந்தனர்.



இந்நிலையில் ரவுடி ஜோசப் ஏம்பலம் அருகே உள்ள தமிழக பகுதியான ஆலமரத்துக்குப்பம் கரும்புக்காட்டில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜோசப்பை அதிரடியாக சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து அவரைக் கைது செய்ய முயற்சிக்கும்போது அவர் தப்பிச் சென்றதாகவும், அப்போது கீழே விழுந்த ஜோசப்பின் வலது கையும், இடது காலும் முறிந்ததாகவும் கூறுகிறது காவல்துறை தரப்பு. ஆனால் அதனை ஏற்க மறுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், தமிழகக் காவல்துறையைப் போல புதுச்சேரி காவல்துறையும் மனித உரிமை மீறலில் ஈடுபடத் துவங்கியிருக்கிறது. அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜோசப்பை கைது செய்த பிறகே அவரின் கை, கால்களை முறிக்கப்பட்டிருக்கிறது. அதனை உரிய ஆதாரங்களுடன் விரைவில் நிரூபிப்போம் என்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post