உடலின் இந்த பகுதிகளில் கடுமையான வலியா.?

 



வாழ்நாளில் இதுவரை கண்டிராத உணர்ந்திராத அளவில்

தலைவலி ஏற்பட்டாலோ

நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டாலோ

வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டாலோ

கணுக்கால் பகுதியில் வலி ஏற்பட்டாலோ


உடனே மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும் 

கால தாமதம் ஆகாது


தலைவலிக்குக் காரணமாக 

மூளை ரத்த நாளக் கசிவு இருக்கலாம்  

உடனே ஸ்கேன் செய்து பார்த்து 

பிரச்சனையை கண்டறிந்தால் 

உடனடி சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். ரத்தக் கசிவை அனுமதித்துக் கொண்டிருந்தால் மூளையின் மீது அழுத்தம் கொடுத்து மரணத்தை விளைவிக்கும் அபாயம் நேரலாம்.  


இதுவே மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருப்பின் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன மருத்துவமனைக்குச் சென்றால் 

மூளை ரத்த நாள அடைப்பை முழுவதுமாக கரைத்து பழைய நிலைக்குத் திரும்பும் வாய்ப்பு அதிகரிக்கும். 


நெஞ்சுப் பகுதி வலிக்கு 

இதய ரத்த நாள அடைப்பு காரணமாக இருக்கலாம். 

கோல்டன் ஹவர் எனப்படும் ஒரு மணிநேரத்திற்குள் சென்றால் 

இதய ரத்த நாள அடைப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்து விட முடியும். 


வயிற்றுப் பகுதியில் திடீரென அதீத வலி ஏற்படுவது குடல் பகுதி ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே எந்த முன் அறிகுறியும் இல்லாமல் திடீரென வயிற்றுப் பகுதியில் தீவிரமான வலி ஏற்படுவது ஆபத்தான அறிகுறியாகும். 

உடனே அலர்ட் ஆக வேண்டும். 


திருமணமான பெண்கள் மகப்பேறுக்கு காத்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென அடிவயிற்றுப் பகுதியில் இடது அல்லது வலப்புறத்தில் அதீத தாங்கொணா வலி ஏற்பட்டால் உதாசீனம் செய்யாமல் உடனே மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். 

கருவானது கருக்குழாயில் உண்டாகி 

கருக்குழாய் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம். இது அவசர நிலையாகும். 

உடனே அறுவை சிகிச்சை செய்து ரத்தப்போக்கை நிறுத்த வேண்டும். தாமதம் ஆகாது. 

 

கணுக்கால் பகுதியில் கெண்டை சதை இருக்கும் இடத்தில் தசைப்பிடிப்பு போல இறுக்கமாக வலி ஏற்பட்டால் ஆழ் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். உடனே இதற்குரிய சிகிச்சை அளித்து அடைப்பு சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிடில் காலுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால் அழுகிவிடலாம் அல்லது ரத்தக்கட்டி ரத்த ஓட்டத்தில் கலந்து மூளை இதயம் போன்ற உறுப்புகளின் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடும். 


மீண்டும் கூறுகிறேன் 

நீங்கள் இதுவரை 

உணராத அளவு 

தீவிரமான வலி 

தலையில்

வயிற்றில்

நெஞ்சுப் பகுதியில் 

அடிவயிற்றில்

கணுக்கால் பகுதியில்

இன்னும் உடலின் எங்கும்  ஏற்படுமாயின் விரைந்து மருத்துவமனையை அடைவதும் 

அதற்குரிய பரிசோதனைகளை செய்வதும்  உயிர்காக்கும் யுக்தியாகும்


தாமதிப்பது ஆபத்தில் முடியலாம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

Post a Comment

Previous Post Next Post